ஜீனியஸ் பார்முலா அதாவது "மேதைகளின் சூத்திரம்" என்றொரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள் டோனி பூசன் என்ற அறிவியல் அறிஞரும் பிரபல செஸ் வீரர் ரேமன்ட் கீன்னும்
இதில் ஜீனியஸ் என்பவர் யார், அவர் எப்படி உருவாகிறார், நீங்களும், நானும், அந்த அளவிற்கு அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்கு என்ன வழி என்று சொல்லித் தருகிறது இந்த புத்தகம், மேதைகளின் அம்சங்களாக அவர்கள் குறிப்பிடுவது பத்து அறிவுகளை
1 சொல் அறிவு :- (Verbal Intelligence)
மொழி வளத்தை மேம்படுத்திக்கொள்வது, புதிய வார்த்தைகளைப் பயன் படுத்துவதில் உள்ள அறிவு. நம் எல்லோருக்கும் ஒரு முக்கியமான பயிற்சி, மிக அவசியமான தேவை.
2 எண் அறிவு :- (Numerical Intelligence)
ஒரு துணிக்கு இரண்டரை ரூபாய் என்றால், பத்தொன்பது துணிக்கு நாற்பது ஏழு ரூபாய், என்று கணக்கு போடும் துணிகடைகாரரில் இருந்து மாதந்திர தொலை பேசி கட்டண விபரம் சரியாக வந்திருக்கிறதா என்று பார்பதுவரை சகலத்துக்கும் சகலருக்கும் கணக்குத் தேவை படுகிறது. இங்கே சொதப்பினால் உங்களுக்குப் பல விதங்களில் இழப்பு.
3 படைப்பு அறிவு :- (Creative Intelligence)
வழக்கத்தை மீறி புதுமையாக சிந்திப்பவர்கள் தான் வித்தியாசமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். நம்முடைய தினசரி வேலைகளை கூட வழக்கத்திலிருந்து மாறுபட்டுப் புதுசாகச் செய்து பழகலாம். அதனால் கிடைக்கும் உற்சாகம் அலாதியானது. சந்தேகமிருந்தால் தினம் ஒரு வடிவில் தோசை செய்து அசத்துகிற தாய்மார்களை கேட்டு பாருங்கள்.
4 இன்ஜினியரிங் அறிவு :- (Engineering Intelligence)
" இன்ஜினியர்" என்றவுடன் நாம் வீடோ, பாலமோ கட்டப்போகிறோம் என்று நினைத்துவிடாதிர்கள். நம்மை சுற்றியுள்ள வெளியின் தன்மையை
தெளிவாக புரிந்து வைத்திருப்பவர்கள் தான் "இன்ஜினியரிங் அறிவு" என்கிறது மேதைகளின் சூத்திரம்.
5 மற்றவர்களோடு கலந்து பழகும் அறிவு :- (Interpersonal Intelligence)
"ஊர் கூடித் தேர் இழுப்பது" என்று நம் ஊரில் சொல்வார்களே, அந்த மற்றவர்களுடன் பழகும் "சகிப்புத்தன்மை" கலந்த புரிதல்தான் இந்த அறிவு.
6 நம்மை நாமே புரிந்து கொள்வதற்கான அறிவு :- (Intrapersonal Intelligence)
உங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? பலங்களை மேலும் வளர்த்து கொள்வதற்கும் பலவீனங்களை சரி செய்வதற்கும் என்ன வழி என்று சிந்திப்பது தான் இந்த அறிவு.
7 புலன் அறிவு :- (Sensory Intelligence)
பார்த்தல், கேட்டல்.நுகர்தல், சுவைத்தல் என நம்முடைய ஒவ்வொரு புலனையும் நாம் அறிகுறியாகவே பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம். அதை மேலும் முழுமையாக்கினால் பல புதிய வாய்ப்புகள் கதவை திறக்கும்.
8 உடல் அறிவு :- (Physical Intelligence)
உடலை கட்டுக் கோப்பாக வைத்துகொள்வது பற்றிய அறிவு. ஆரோகியமான உடல்நிலைக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எதைச் சாபிடலாம், எதை சாப்பிடக் கூடாது என புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உடலுக்கும், அறிவுக்கும் நல்லது.
9 ஆன்மிக அறிவு :- (Spiritaal Intelligence)
இங்கே "ஆன்மீகம்" என்றால் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவதைச் சொல்லவில்லை. நாம் வாழும் இந்த உலகத்தை, இயற்கையை, மனிதர்களை,
விலங்குகளை, மரம், செடிகளையெல்லாம், புரிந்து வைத்திருப்பது. அவற்றோடு ஒத்தினசந்து வாழப் பழகுவது.
10 அறிவுகளின் அறிவு :- (Intelligence Of Intelligence)
இத்தனை அறிவுகளையும் எப்போது எதைப் பயன்படுத்த வேண்டும்,
குறைபட்டதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும், என்கிற சரியான புரிதல் நமக்கு இல்லாவிட்டால் எத்தனை அறிவு இருந்தும் பயன்படாது. வீடு நிறையப் பாத்திரங்களை அடுக்கி வைத்துகொண்டு சமைக்கத் தெரியாமல் இருப்பதைபோலதான். இதைத்தான் இந்த பத்தாவது அறிவு சுட்டிக்காட்டியிருக்கிறது . இத்தனை அறிவுகளையும் வளர்த்துக்கொண்டால் வெற்றி தான்
----------- இரா.குமரன் ----------------










