சனி, 10 செப்டம்பர், 2011

அதிர்ச்சி அர்த்தமற்றுப் போனது.


      "அதிர்ச்சி என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தமே இல்லை!
ஒரு சாமான்யன், ஒரு நாளைக்கு எத்தனை முறை தான் அதிர்ச்சியாவது?
பேருந்து நிலையத்தை கடக்கும் போது, "வெள்ளை காமராசர் சரத்குமார் அழைக்கிறார்", என சுவரில் எழுதி இருக்கிறார்கள். பக்கத்திலேயே "கருப்பு சேகுவேரா அழைக்கிறார் சீமான்". உச்சமாக, சுபாஷ் சந்திரபோஸ் கழுத்தில் கருணாஸ்.

            மட்ட மத்தியானம் பேலன்ஸ் இல்லாத மொபைலுக்கு, "உங்களோடு பேச அழகிய இளம்பெண்கள் காத்திருக்கிறார்கள். செக்சி மற்றும் ஹோம்லி" என எந்த நாய் மெசேஜ் அனுப்புவது? பிரபுதேவா - நயன்தாரா காதல் பற்றி தங்கர் பச்சானிடம்  எதற்கு கருத்து கேட்கிறார்கள்? பாரதி ராஜா படத்தில் மாட்டு டாக்டர், வாத்தியார் கேரக்டரில் வரும் ராஜா மாதிரி, உத்திரப்பிரதேசக் கிராமங்களில் சுற்றி திரியும் ராகுல்காந்தி தான் நமது அடுத்த பிரதமாரா?
எங்கெங்கும் பிதுக்கப்பட்டுக் கிடக்கும் வாட்டர் பாகெட்டுகளால் இந்த மண் அடையும் அதிர்ச்சியை நம்மில் எத்தனை பேர் அடைவோம் நண்பர்களே?

            ஊழல் என்ற சொல்லின் கனத்தை இழக்க வைத்தவர்களை, கொடூரங்களை  செய்தியாக அறையும் ஊடகங்களை, இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை, பெட்ரோல், காஸ், விலையை ஏற்றி விட்டு பி.எம்.டபிள்யூ, சிக்ஸ்த் சீரியலுக்கு வரி குறைப்பவர்களை, தேங்காய் பத்தைகளோடு இலவச மிக்சிக்குக் காத்திர்ப்பவர்களை, இன்னமும் ஐ.சி.யு. சீன் வைக்கிற சீரியல்காரர்களை, இந்திகாரர்கள் பாடும் தமிழ் பாடல்களை, தமிழ்நாட்டில்  வறுமை கோடே இல்லை என்று அறிவிக்கும் அதிகாரத்தை, அத்தனை நாயர்களும் டீக்கடை போட்டுக்கொண்டு திரியும்போது 1 இலட்சம்கோடி நகைகளைக் கோயிலுக்குள் பதுக்கிவைத்த மன்னர்களை, ஈழத்து இசைப்பிரியாக்கள் சிதைந்து கருகும் சேனல்4 காட்சிகளை ரிமோட்டில் தாண்டும் தமிழர்களை ........
கடந்து தான் இந்த வாழ்க்கை என்றால் ஒரு சாமானியன் ஒரு நாளைக்கு எதனை முறை தான் அதிர்ச்சியாவது? 



                      --------ராஜு முருகன்  (வட்டியும் முதலும் கதையிலிருந்து)
                                                       (நன்றி  ஆனந்த விகடன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக